ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 1
முத்து ஐயர்
பகவத் கீதையைப்பற்றி என் எண்ணத்தின் கோணத்தில் எழுதத் தொடங்குகிறேன். இதில் எல்லா ஸ்லோகங்களையும் தொகுத்து அளிக்க இயலாது என்றாலும் நான் ரசிக்கும் பல ஸ்லோகங்களை விரிவாக்கி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதை வாரம் இருமுறை வெளியிடலாம் என்பது என் கருத்து. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது தமிழில் எழுத வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்கு தங்களைப் போன்றவர்கள் ஆதரவு கிடைக்கும் வரை தொடருவேன். நான் யு.என்.ஐ. என்ற செய்தி நிறுவனத்தில் இருந்தபோது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடிந்தது. இப்போது தமிழிலும் எழுத வாய்ப்பு கிடைத்திருப்பதால் அவசியம் எழுதுவேன். அதுவும் அழகி தமிழ் வடிவம் மூலம் எழுத மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. இதற்குமுன் முரசு அஞ்சலில் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் அது ஒரு எல்லைக் கோட்டுக்குள் இயங்குவதால் அதில் என்னால் அதிகம் பலனடைய இயலவுமில்லை. என் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளவும் முடியவில்லை. ஆகையால் அழகி குழுமத்துக்கு மிகவும் நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் எழுதும் பகவத் கீதை பிரசுரத்துக்கு உகந்தது என்று தாங்கள் கருதினால் தயவுசெய்து அதை வெளியிடும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னுரை
வேதங்கள் நான்கு என்பதை நாம் அறிவோம். இந்த வேதங்களின் சாரமே உபநிஷதுக்கள் என்பதும் யாவரும் அறிந்த்தே. இதுவன்றி ஸ்ரீ வியாஸ பகவான் மஹாபாரத்த்தை ஐந்தாவது வேதமாக எழுதி அதற்கு சாரமாகவே பகவத் கீதையும் எழுதினார் என்றும் கொள்ளலாம். இது ப்ரம்மவித்தையாயும், தலைசிறந்த யோக ஸாஸ்த்திரமாயும் விளங்குவதோடல்லாமல் ஜீவாத்மா-பரமாத்மாவினிடையே நடந்த சம்பாஷனையாகவும் அமைந்துள்ளது.ஸ்ரீ க்ருஷ்ணபரமாத்மா யாருக்கு கீதையை உபதேசம் செய்கிறார். நம் நிலையில் மன சஞ்சலத்தோடு பாவ புண்ணிய வித்யாசம் தெரியாமல் தவித்த அர்ஜுன்னுக்கு உபதேசிக்கிறார். காரணம் தர்மர் தர்ம ஸாஸ்த்திரங்களில் தலை சிறந்து விளங்குபவர். அவருக்கு இந்த உபதேசம் தேவையில்லை. பீமன் சர்வ வல்லமை படைத்தவன். முரடன். அவனுக்கு உபதேசித்திருந்தாலும் எடுபடாது. நகுல, சகதேவன் இருவரும் பாலகர்கள் இருந்தாலும் வேத ஸாஸ்திரத்திலும், ஜோசியத்திலும் வல்லுனர்கள். அவர்களிடம் இதை உபதேசித்துப் பயனில்லை. ஆக ஆசா பாசங்கள் நிறைந்து, மன சஞ்சலமடைந்து நிற்பது என்னையும், உங்களையும் போன்ற அர்ஜுன்ன் ஒருவன் மட்டுமே. அதனால்தான் இதை நம் எல்லோருக்கும் வேண்டி ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா, அர்ஜுன்னுக்கு உபதேசித்திருக்கிறார்.
ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் கீதையை "ஸமஸ்த்த வேதார்த்த ஸார ஸங்க்ரஹபூதம்" என்று குறிப்பிட்டுள்ளார். நல்ல விஷையங்கள் எதுவுமே ஒரு தனி மதத்தை மட்டும் சாராது. ஆகையால் பகவான் உபதேசித்த பகவத் கீதை உலகிலுள்ள சர்வ மனுஷ்ய ஜாதிகளுக்கும் பொதுவான ஒரு மறை அல்லது வேத சாரம். இதன் மஹத்துவமறியப்பட்டுத்தான் ஸ்ரீமத் பகவத் கீதை இந்தியாவில் பேசப்படும் பல மொழிகள் மட்டுமன்றி உலகின் ஆங்கிலம் உட்பட பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
கீதோபதேசக் காட்சியை சற்று கண்ணை மூடிக்கொண்டு காணுங்கள். அர்ஜுன்ன் யுத்தகளத்தில் வெள்ளைக் குதிரை பூட்டிய தேரில், ஆஞ்சனேயர் உருவம் பதிக்கப்பட்ட கொடியைக் கட்டி நிற்கிறான். இவன் ஜீவாத்மாவின் ப்ரதிநிதி. ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா அந்த்த் தேரில் சாரதியாக பஞ்ச குதிரைகளின் கடிவாளங்களைத் தன் கையில் அடக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறார். தேர்தான் நம் சரீரம். பஞ்ச குதிரைகளும் நமது பஞ்ச இந்திரியங்கள். ஸ்ரீ க்ருஷ்ணர் சாரதி. அவரிடம் சரணாகதி அடைந்துவிடு. உன் வாழ்க்கைப் வெள்ளைவெளேரென்று ப்ரகாசிக்கும்.
நம் வாழ்க்கைத் த்த்துவமே சரணாகதிதான். குழந்தையாயிருக்கும்போது அன்னையிடம் சரணாகதி. ப்ரஹ்மச்சரியத்தின்போது குருவிடம் சரணாகதி. க்ருஹத்தாஸ்ரமத்தில் மனைவியிடமும், குழந்தைகளிடமும் விட்டுக் கொடுத்து வாழ்ந்து சரணாகதி அடைந்து விடுகிறோம். மூப்பு வரும்போது இறைவனிடம் சரணாகதி. இப்படி வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் சரணாகதி. சரணாகதிதான் த்யாகமாகிறது. கீதை எதைக் கற்றுத்தருகிறது? த்யாகத்தைத்தான் கற்றுத் தருகிறது. கீதா, கீதா, கீதா, கீதா, கீதா, கீதா என்று பலமுறை சொல்லிப்பாருங்கள். ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் அது த்யாகீ. த்யாகீ, த்யாகீ, என்றே வரும் என்கிறார். இதுதான் கீதையின் சாரம். இனி உள்ளே செல்வோமா?


