வணக்கம். மேற்கண்ட புகார்கள் முறையே தினமலர் பத்திரிகைக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும், கொடுத்தது. தினமலர் பத்திரிகைக்குக் கொடுத்துப் பல மாதங்கள் ஆகியும், பத்திரிகையும் வெளியிட வில்லை, எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உள்ளாட்சித் துறைக்குக் கொடுத்து ஒரு வாரம் ஆகிறது. இன்று வரையில் பதில் இல்லை. எங்கள் ஊரிலேயே உள்ள அம்பத்தூர் டவுன் நியூஸ் செய்தித் தாளுக்கும் புகார் நேரில் சென்று அதன் ஆசிரியர் திரு மு. கதிரவனிடம் நேரில் கொடுத்துவிட்டு வந்தோம். அவர்களும் 15 நாட்களுக்கு மேலே ஆகியும் புகாரை வெளியிடவும் இல்லை. சாலை சமீபத்திய சிறு மழைக்கே ரொம்ப மோசமாக இருக்கின்றது. தாங்கள் இதை வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அனுப்புகின்றேன். வேறு கட்டுரைகளும் கொஞ்சம், கொஞ்சமாய் அனுப்ப முயல்கிறேன்.
நன்றி. வணக்கம்.
கீதா சாம்பசிவம்
அம்பத்தூர் நகராட்சியின் புறக்கணிப்பால் அல்லல் படும்
இந்தியன் வங்கி காலனி வாசிகள்.
இந்தக் காலனி, 1962-ல் DTP யால் அங்கீகாரம் பெற்று, குடியிருப்பு ஏற்படுத்தப் பட்டது. 40 வருஷத்திற்கு மேல் உள்ள இந்தக் காலனியின் நிலைமை படு மோசமாக இருக்கிறது. இங்கே அதிக பட்சமாய் 2,000 மக்கள் வசிக்கிறார்கள். அடிப்படை வசதிகளே இல்லாமல் அனைவரும் மிக்க துன்பத்துக்கு ஆளாகிறோம். இந்தக் காலனியில் 30 அடி, 40 அடி, 50 அடி எனச் சாலைகள் இருந்தும், பல வருடங்களாகச் சாலை சீர்கெட்டே கிடக்கிறது. சாலையில் இருபக்கமும் சாக்கடைகளைக் கட்டி மேல்புறத்தில் இருக்கும் வீடுகளில் இருந்தும், அடுக்குமாடிக் குடி யிருப்புக்களில் இருந்தும் வெளியேறும் கழிவு நீர், ஆறு போல் ஓடி, எங்கள் காலனியில் இருந்து வெளியே செல்ல சரியான வடிகால் இல்லாமல் , கழிவு நீர் சாக்கடையிலேயே தங்கி வருடம் பூராவும் தேங்கி இருப்பதால், நாற்றமும், கொசுத் தொல்லையும் தாங்க முடியாமல் அவதிப் படுகிறோம். மழை நாட்களில் சாக்கடைத் தண்ணீரும் மழை நீரும் வீட்டுக்குள் புகுந்தும், காலனியில் இருந்து ஓடுவதற்குச் சரியான வழி இல்லாமையால் பல நாட்கள் சாலைகளில் தண்ணீர் தேங்கியே இருந்த வண்ணமாயும் உள்ளது.நல்ல சாலை வசதி இல்லாமையால் மழைக்காலத்தில் தண்ணீரிலும், மேடுபள்ளமான சாலையில் போய்வரக் குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் வெளியே செல்ல முடியாமல், அவசரத்துக்குக் கூட ஆஸ்பத்திரி போன்ற இன்றியமையாத இடங்களுக்குக் கூடச் செல்ல முடிவதில்லை. ஆட்டோவும் மழைக்காலம் என்றால் இந்தியன் வங்கி காலனிக்கு வருவதில்லை. காஸ் சிலிண்டர் கொண்டு வரும் ஆட்களும் உள்ளே வருவதென்றால் அதிகப் பணம் கேட்கின்றார்கள். நகராட்சி, எம்.பி., எம்.எல்.ஏ. கவுன்சிலர் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கு எங்கள் குறைகளை இந்தியன் வங்கி காலனி குடியிருப்புச் சங்கம், மூலம் பலமுறை எழுத்து மூலம் கொடுத்தும் இது நாள் வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஒவ்வொரு முறையும் பொதுத் தேர்தல் வருகிறது. போகிறது. ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் வருகின்றார்கள், செல்கின்றார்கள். ஆனால் யாரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாதாளச் சாக்கடைக்கு வைப்புத் தொகையாக ரூ.7,500/- ஜனவரி 2001-ல் கட்டச் சொன்ன நகராட்சி, 2 வருடங்களில் பாதாளச் சாக்கடை போட்டுவிடுவோம் எனச் சொன்னது. குடியிருப்பு வாசிகள் அனைவரும் ரூ.7.500/- 2001-ல் கட்டியும் இன்றுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. அந்தப் பணம் இந்த ஏழு வருடங்களில் இரு மடங்காக ஆகி இருக்கும். அது என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. முக்கியமான சந்திப்புகளில் சோடியம் வேப்பர் விளக்குகள் அமைக்கப் படாததால் இந்தச் சாலைகளில் இரவில் செல்லவும், வரவும், மிகவும் கஷ்டமாய் உள்ளது. அம்பத்தூர் OT பகுதியில் இருந்தும், மற்றப் பகுதிகளில் இருந்தும் வரும் அனைத்துக் கழிவு நீரும், திறந்தச் சாக்கடை மூலமாக எங்கள் பகுதிக்குத் திருப்பிவிடப் பட்டிருக்கிறபடியால், சுவையாக இருந்த கிணற்று நீரும் உபயோகிக்க முடியவில்லை. குடிநீர் வசதியும் வீடுகளுக்குச் செய்து தரப் படவில்லை. மற்றப் பகுதிகளுக்குக் குடிநீர் லாரி சென்று விநியோகிக்கிறது. இங்கே அதுவும் வருவதில்லை. ஆதலால் சுகாதாரமற்ற நீரையே உபயோகிக்க வேண்டிய கட்டாயம்.
ஆதலால் அரசாங்கம் உடனே கீழ்க்கண்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி உள்ளாட்சித் துறை அமைச்சரை இந்தக் காலனி வாழ் பொது மக்கள் மிகவும் வேண்டிக் கொள்கின்றார்கள்.
1. கழிவு நீர்ச் சாக்கடை எங்கள் காலனியில் இருந்து திருப்பி பிரதான சாலையில் உள்ள வடிகால் மூலம் செல்ல ஏற்பாடு செய்யவும்,
2. வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புக் கொடுக்கவும்,
3.தரமான சாலை வசதிகள் செய்து கொடுக்கவும்,
4.முக்கியமான சந்திப்புகளில் சோடியம் விளக்குகள் அமைக்கவும்
கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்குக் காலனிவாசிகள் சார்பாக
K.சாம்பசிவம்.