குடியரசு தினம் ஜனவரி 26, 1950
என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது. தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன. சென்னையில் நடந்ததை எழுதுகிறேன். குடியரசுதினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர். மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது. பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேர ஆரம்பித்து விட்டது, சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம். திடீரென்று நிசப்தம். கோச்சு வண்டியின் சப்தம் ஆம், கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடை போட்டு அவரது கோச்சுடன் வந்து கொண்டிருந்தன. அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திரு ஆர்.எம். மகாதேவன், மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ்.
கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது. சென்னையின் முதன் மந்திரி பி.எல். குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார். போலீஸ் படையும் மரியாதை செலுத்தினர். அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடி தயாராக வைக்கப்பட்டிருந்தது. கவர்னர் அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார். பின் அதற்கு மரியாதை அளித்தார். உடனே இராணுவப் படைகளும் மரியாதை செலுத்தின.
மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாண வேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்தது. வனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் வந்தேமாதரம் பாடல் டீ.அர். விஸ்வநாத சாஸ்திரி தொகுத்தது பின் மதுரை சோமசுந்தரம் கச்சேரி, பின் டில்லியில் நடந்த குடியரசு விழாவின் நேர் முக வர்ணனை, மாலை திருவெண்காடு பி. சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின் குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை, என்.எஸ். கிருஷ்ணன, டி.ஏ. மதுரம் அவர்களின் "விந்தை மனிதன்" இரவு திருமதி எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி.
இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது.
ஆஹா! பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில் கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டி.வி.யில் பல சானலகள், அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு. பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள் வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்ன வீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்து டிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே, இதே போல் அந்தக் காலத்தில் இருந்த கவிஞர் எழுத்தாளர், தியாகிகள், வீரர்கள் போன்றவர்களை அழைத்து அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச் சொல்லாமே.
என் இனிய குடியரசு வாழ்த்துகள்.
அன்புடன் விசாலம்
அன்புள்ள நண்பர்களே,
இனையப் பாட்டி திருமதி விசாலம் ராமன் எழுதிய கட்டுரை படித்தேன். அவர்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை. நமக்காகப் பல தியாகங்களைச் செய்து நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பல தியாகிகளை நாம் மறந்து விட்டோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
என்னும் திருக்குறளுக்கு ஏற்ப நாம் அவர்களையெல்லாம் கௌரவிக்க வேண்டியது நம் கடமை.
ஆகவே உங்களில் பலருக்குத் தெரிந்த இன்னும் உலகிற்குத் தெரியாத பல தியாகிகள் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிக் கண்டு பிடித்தாகிலும் அவர்களுக்கு ஆவன செய்ய நாம் கடமைப் பட்டிருக்கிறோம். ஆகவே உங்கள் உறவினர்கள், அல்லது நண்பர் குடும்பங்கள் அல்லது உங்கள் குடும்பத்திலேயே இருக்கும் தியாகிகளைப் பற்றி அவர்கள் செய்த தியாகங்கள் பற்றி விவரமாக எழுதுங்கள். தகுந்த ஆதாரத்தோடு எழுதுங்கள்.
நம்மால் முடிந்த அளவு அவர்களை மொத்தமாக அழைத்து ஒரு இடத்தில் நாம் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தலாம். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அனைவரிடமும் வேண்டுகோள் அளிக்கலாம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ


