பாட்டுக்கொரு புலவன்
11/12/2008 - இன்று பாரதியாரின் 127 வது பிறந்த நாள் விழா புதிய உட்லண்ட்ஸ் உணவகத்தில் மாலை ஆறு மணிக்கு விழா ஆரம்பித்தது. திரு ஓ.எஸ். அருண் அவர்கள் பாரதியாரின் பாடல்களைப் பாடினார். சுந்தரத் தமிழிலே அதுவும் பாரதியாரின் பாட்டுக்களை, யுகக் கவிஞன் பாரதி பிறந்த நன்னாளிலே காதாரக் கேட்டு மகிழ்ந்தோம் நானும் என் துணைவியாரும், என்ன தவம் செய்தனை தமிழ்த்தேனீ என்று மகிழும் வண்ணம். இத்தைகைய வாய்ப்பை எங்களுக்குத் தந்தவர் திரு நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள். அவர் ப்ரத்யேகமாக எங்களுக்கு விடுத்த அழைப்பே இத்தகைய பேரானந்தத்துக்கு வழி வகுத்தது.இன்று திரு ஓ.எஸ். அருண் அவர்கள் பாடியதை அடுத்து மேடையிலே அத்துணை இசைக் கலைஞர்களையும் பொன்னாடை போர்த்து மரியாதை செய்தார் திரு நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்.
திரு ஏ. நடராஜன் அவர்கள் வரவேற்புரை அளித்தார். முன்னாள் அமைச்சர் அருளாளர் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தலைமை ஏற்று திரு நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய 1. "பாரதியின் விசுவரூப தரிசனம்", 2."கேள்வியும் நானே பதிலும் நானே" என்கின்ற இரு புத்தகங்களையும், திரு சீனி விசுவநாதன் அவர்கள் பதிப்பித்த "காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்: ஒன்பதாம் பகுதி" ஆகிய நூல்களை வெளியிட்டு, கருத்துரை கூறினார். மற்றும் அவர் பேசும்போது பாரதியைப் பற்றிய அவருடைய பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
நூல்களைப் பெற்றுக்கொண்ட பாரதியார் சங்கத்தின் தலைவர் திரு காந்தி அவர்கள் பாரதியாரின் பெருமைகளைப் பற்றி விரிவாகப் பேசிவிட்டு, இன்று காலையில் பாரதியின் சிலை அருகே அவரும் இன்னும் சிலரும் பாரதியின் பாடல்களைப் பாடியவண்ணம் இருக்கையில், ஏதோ தங்களுக்கு தொடர்பே இல்லாத ஒரு நிகழ்வைப் பார்ப்பது போல பார்த்துக்கொண்டே அகன்ற மக்களைப் பற்றி, நம் மக்களின் அறியாமையைப் பற்றி வருத்தம் தெரிவித்தார். மற்றும் பாரதியாருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார். அனைத்து மக்களும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் பாரதியாருக்கு நினைவுமண்டபம் அமைக்க என்று வேண்டிக்கொண்டார்.
திரு நல்லி குப்புசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். திரு சீனி விசுவநாதன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அது மட்டுமல்ல, இரண்டாவது மாடியில் உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காதுக்கு இனிமையான பாரதி பாடல்களையும், கானத்தையும், மனதுக்கு இனிமையான பாரதியின் நினைவுகளையும், நாவிற்கு அருமையான சுவையான உணவையும் அளித்த நல்லி குப்புசாமி அவர்களுக்கும், கவிஞர் பாரதியார் நன்றி சொல்லி மன நிறைவோடு வீட்டுக்கு வந்தோம். கவிஞர் பாரதிக்கு நாம் உணவளித்தோமோ இல்லையோ, இன்றும் பலருக்கு அவர் உணவளித்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.
அன்புடன்
தமிழ்த்தேனீ










