-
தினம் ஒரு சிந்தனை
ஆழ்மனம்
நம் மனம் ஒரு அற்புதமான இயங்குதளம்,நம் ஆழ்மனதின் சக்தியை நம்மில் பலர் இன்னும் உணர்ந்தோமில்லை. நம் ஆழ்மனம் கடலுக்கு ஒப்பானது, அதனால்தான், ”கடலாழம் காண முடிந்தாலும் பெண்கள் மனதாழம் காண முடியாது” என்றொரு சொல்வழக்கு உள்ளது.
ஏன் பெண்களின் மனதாழத்தை அவ்வளவு நுணுக்கமாகச் சொன்னார்கள் என்றால் ஆண்கள் மனதும் ஆழம் மிக்கதுதான், ஆனாலும் பெண்களைப் போல் அவ்வளவு நுணுக்கமாக ஆண்கள் மனதை உஅப்யோகிப்பதில்லை என்று தோன்றுகிறது. நுனிப்புல் மேய்வது என்று கூறுவார்களே அதைப் போல ஆண்கள் மனதின் நுனிப்புல்லைத்தான் மேய்கிறார்கள். பெண்களைப் போல அவ்வளவு ஆழமாக வேர் வரை தோண்டும் குணம் ஆண்களுக்கு இல்லை எனலாம். அதனால்தான் மனம் போல் மாங்கல்யம் என்கிறார்கள். மாங்கல்யம் பெண்களுக்கு உரியது. அந்த மாங்கல்யத்தை அவர்கள் எப்படிப்பட்ட மாங்கல்யமாக, அதாவது எப்படிப்பட்ட வாழ்க்கை தனக்கு அமைய வேண்டும் என்பதை அவர்களின் மனது தீர்மானிக்கிறது என்கிறார்கள். அதனால்தான் ஆதி காலம் தொட்டு சுயம்வரம் என்னும் ஒரு அதிகாரத்தைப் பெண்களுக்கு அளித்தனரே தவிர, ஆண்களுக்கு அளிக்கவில்லை.
குறிப்பிட்ட முதிர்ச்சி ஆண்களை விட அதிகமாகப் பென்களுக்குக் கிடைக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்ததால்தான் ஆண்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கவில்லையோ என்று தோன்றுகிறது,
நம் ஆழ்மனதின் சக்தியை அறிய கடந்த கால வாழ்வில் இதிகாச புராணங்களிலும், கடந்த கால சரித்திரங்களிலும் படித்தாலும், அதில் வரும் ஆண்களை விட எண்ணிக்கையில் குறைவாகப் பெண்கள் இருந்தாலும், அந்தக் குறைவான பெண்கள் கூட நிறைய ஆண்களுக்கு இடையே ஒப்பு நோக்கில் மிகச்சிறந்த ஆழ்ந்த ஞானத்தோடு விளங்கினார்கள் என்பது கண்கூடு. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்றொரு பெண்மணி கேட்கவில்லையா? இது வரை சாவித்திரி போல் எந்த ஒரு ஆண்மகனாவது தன் மனைவியை மீண்டும் உயிரோடு பெற்றிருக்கிறானா கூற்றுவனிடமிருந்து?
பெண் மஹா சக்தி என்கிறோம், சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதே முன்னோர்களின் சொல்வழக்காக இருந்திருக்கிறது. சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது தடுத்து ஆட்கொண்டவள் சக்தி.விஷ்ணுவுக்கு அவ்வப்போது பல நேரங்களில் ஆதார ஸ்ருதியாய் விளங்கியவள் லக்ஷ்மி.
அதனால்தானே விஷ்ணு தன்னுடைய மார்பில் வாசம் செய்ய வைத்தார் லக்ஷ்மியை. ஈசன் தன் உடம்பிலே பாதியை ஈந்தார், அதுவும் போதாக்குறைக்குத் தன் தலையிலேயே இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இந்தச் செய்திகளைப் பார்க்கும்போது ஆணைவிடப் பெண்ணுக்கு ஆழ்மனதோடு தொடர்பு அதிகம் என்றே தோன்றுகிறது.
ஒவ்வொரு அசுரனையும் அழிக்க அது ஈசனாக இருந்தாலும், விஷ்ணுவாக இருந்தாலும், ஆதார சக்தியய், காரணியாய் விளங்குபவள் சக்திதானே. என்னதான் ப்ரும்மா படைத்தல் தொழிலைச் செய்து ப்ரபஞ்சமே இயங்கக் காரணமாய் இருந்தாலும், அவரையும் இயக்கும் சக்தியாக சரஸ்வதி அல்லவோ இருக்கிறாள்.
ஆகவே நம்முள் இயங்கும் ஆழ்மனதின் சக்தியை நாம் உணரவேண்டுமெனில் சக்தியை நாடுவோம். தற்கால நடைமுறை வாழ்வில் பொண்டாட்டி மிகச்சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவளாக இருந்தால் ஒவ்வொரு ஆணும் தன் குடுமியை அவளிடத்திலே கொடுத்துவிட்டு நிம்மதியாக நுனிப்புல் மேயலாம் தவறில்லை என்றே தோன்றுகிறது.
ஆங்கிலத்திலே (henpegged Husband) தமிழில் பொண்டாட்டி தாசன் என்று பலரால் கேலிக்குரியவராகப் பார்க்கப்படும் ஆண்களே தலை நிமிர்ந்து நில்லுங்கள். ஆனால் ஒன்று,
பொண்டாட்டி நிர்வாகத்திறன் மிக்கவள்தானா என்று அறியும் சோதனையில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் உங்கள் நிர்வாகத் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் குடுமி காப்பாற்றப்படும்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
