-
தினம் ஒரு சிந்தனை
ஊர்வம்பு
நாம் நமக்கிருக்கும் முக்கியமான வேலைகளைக் முடிக்கவே நேரம் போதாமல் இருக்கிறோம்.ஆகவே அனாவசியமான ஊர்வம்பு பேசுவதை விடுத்து நம்முடைய கடமைகளை ஒழுங்காக, அதனதன் நேரத்துக்கு முடித்தாலே நன்மை விளையும். அதை விடுத்து அனாவசியமான ஊர்வம்பு விவகாரங்களில் மூக்கை நுழைத்து அதைப் பற்றியே பேசி நேரத்தைக் கடத்துவது தகாத செயல்.
ஒரு பெண்மணி எப்போதும் அடுத்தவர் விவகாரங்களை அலசி அவர் சரியில்லை, இவர் சரியில்லை என்று கூறிக்கொண்டே இருப்பார். அடுத்தவர்களைக் குறை கூறியே அவருடைய நேரம் கழிந்து கொண்டிருந்தது. அதனால் அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் இழந்தவை ஏராளம். கடைசியில் ஒரு நாள் அவருடைய புருஷனையே கோட்டை விட்டுவிட்டார். எப்படி என்று கூறுகிறேன். அவருடைய எதிர் வீட்டுப் பெண்மணி சற்றே வசதியானவர், ஆனால் அவருடைய நடத்தை சரியில்லை, இது அனேகமாக அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் வேலைக்குப் போய் வரும் ஆண்கள் இது போன்ற விஷயங்களை அவ்வளவாக கவனிப்பதில்லை. இந்தப் பெண்மணி ஒரு நாள் தன் கணவரிடமும் இந்த செய்தியை ப்ரஸ்தாபித்திருக்கிறார். முதலில் அதிர்ந்து போன கணவர் மனதில் அந்தப் பெண்மணியைப் பற்றி இருந்த நல்ல அபிப்ராயம் விலகியது. அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அந்தக் கணவர் மனதில் ”ஆத்தோடு போற தண்ணி யார் குடிச்சா என்ன?” என்கிற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்தார். அதன் விளைவு இப்போது அந்தப் பெண்மணியின் வலையில் இந்தக் கணவரும் விழுந்தார்.
இது தேவையா? சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்னும் பழமொழிக்கு இந்தப் பெண்மணி ஆளாகிவிட்டாள். ஆகவே அடுத்தவர் விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் தங்கள் மனதை நல்ல வழியில் திருப்பி நல்லதையே எண்ணுக, நல்லதையே பேசுக.
மூன்று குரங்கு பொம்மையை பார்த்திருப்பீர்கள். தீயதைக் காணாதே, தீயதைப் பேசாதே, தீயதைக் கேட்காதே என்று உணர்த்தும் படியான அந்தக் குரங்கு பொம்மைகள் நமக்கு உணர்த்தும் பாடங்கள் பலப்பல.
அன்புடன்
தமிழ்த்தேனீ
