-
தினம் ஒரு சிந்தனை
நாம் சொல்லும் சொற்கள் நம் தரத்தை உணர்த்தும் கருவிகள்
”பேசப் போனியோ சாகப் போனியோ” என்று என் தாயார் சொல்வார்கள், பேசுவதற்குமுன் யோசித்து வார்த்தைகளைப் பேச வேண்டும்.
அதுவும் பொது இடங்களில், பொது மேடைகளில், அல்லது பொது மடல்களில் ஏன் மடல்களையும் சேர்த்தேன் என்றால், இப்போதெல்லாம் நாம் பேசிக்கொள்வது மடல்களில்தான், நாம் எழுதும் எழுத்துக்களே நமக்கு மரியாதை சேர்க்கின்றன. இணைய தள மடல்களும், நம் தொலை பேசி உரையாடல்களும், அல்லது மேடைப் பேச்சுக்களும் நாம் யார்? நம் தரம் என்ன என்பதை, உணர்த்தும் கருவியாக செயல்படுகின்றன என்பது தெளிவு.
அதேபோல்
"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து”
என்ற வள்ளுவரின் வாக்குக்கொப்ப இதோ ஒரு கதை:
தமயந்தியைப் பிரிந்து நளன் கால்போன போக்கிலே சென்று கொண்டிருந்தான், அப்போது ஐயோ யாராவது காப்பாற்றுங்களேன், தீயினில் மாட்டிக்கொண்டு விட்டேனே, என்று ஒரு குரல் கேட்டது. நளனுக்கு இந்திரனும், அக்னி பகவானும் அளித்த வரம் நினைவுக்கு வந்தது. நளனுக்கு அக்னி பகவானால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதே அந்த வரம். அதனால் தைரியமாக நளன் அந்த்த் தீயினில் உள்ளே சென்று பார்த்தான். அங்கே நாகங்களின் தலைவன் கார்க்கோடகன் தீயினில் மாட்டிக்கொண்டு அலறிக்கொண்டிருப்பதைப் பார்த்து உடனே கார்க்கோடகனைக் காப்பாற்றி, கையில் எடுத்துக்கொண்டு தீயை விட்டு வெளியே வந்தான். அப்போது கார்கோடகன் நளனே, மிக்க நன்றி, என்னை அப்படியே கீழே விட்டு விடாதே, ஏகம் என்று எண்ண ஆரம்பித்து தச என்று பத்து எண்ணிவிட்டுக் கிழே விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தான். நளனும் எண்ண ஆரம்பித்தான், தச என்றான் நளன்.
அப்போதைய காலகட்டத்தில் நளனுக்கு சனீஸ்வரன் பீடிக்கும் வேளை. அதற்கேற்றார்போல் தச என்று நளன் கூறியவுடன் கார்கோடகன் நளனைத் தன் விஷப் பற்களால் தீண்டினான். நளனின் உடல் முழுவதும் கருப்பாகியது. நளன் அடையாளமே தெரியாமல் மாறிப் போனான். கார்கோடகன் "நளனே, நீங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள் அதற்குதான் நானும் ப்ரதி உபகாரம் செய்தேன், உங்களை யாருக்கும் இப்போது அடையாளம் தெரியாது, நீங்கள் அஞ்ஞாத வாசத்தில் இருக்கும்போது உங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்றான்.
எல்லாம் சரி, எதற்கு இந்தக் கதை என்கிறீர்களா?
சனீஸ்வரன் பீடிக்கும் வேளையில்தான் கொடுமையான வார்த்தைகள் நம் வாயிலிருந்து வரும், அதுமட்டுமல்ல, யார் சொன்னாலும் யோசிக்காமல், தகுதி அறியாமல் உதவி செய்தாலும், தகாத வார்த்தை, அதாவது பொருள் தெரியாமல் வார்த்தைப் ப்ரயோகம் செய்தால் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை விளக்கும் கதையல்லவா இது? அதற்காகத்தான் இந்தக் கதை சொன்னேன்,
ஆம் ’தச” என்றால் பத்து என்று நமக்கெல்லாம் தெரியும்.
ஆனால் கடி என்று ஒரு பொருளும் உள்ளது. அதனால்தான் கார்க்கோடகன் கடித்தான்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
