சிந்தனை செய் மனமே! தினமே
சிந்தனை 6:
உலகம் எங்கே போகிறது? உலகம் எங்கும் போகவில்லை, நாம் தான் மனிதம் என்னும் மகத்தான புனிதத்தை விட்டு விலகி, மக்கள் எனும் உயரிய நிலையிலிருந்து விலகி மாக்கள் என்னும் நிலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கைப் பயணம் என்றொரு கட்டுரை படித்தேன்.
அதில் குறிப்பிட்டுள்ள சில வரிகள்:
நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு வினாடியும் நமக்கு ஒவ்வொரு பாடம் கற்றுத்தரும் அனுபவம். அந்த அனுபவங்களிலிருந்து நாம் நிறையப் பாடங்கள் கற்கிறோம், ஆனால் கற்ற பாடங்களை நாம் கடைபிடிக்கத் தவறிவிடுகிறோம். அதுதான் இன்னமும் நம்மை அடுத்த நற்செயலுக்கு நாம் போகாதவாறு தடுத்துக் கொண்டிருக்கிறது.
உலகிலே தவறுகளே செய்யாத ஒருவரைக் காண்பது மிகவும் கடினம். தவறுகள் செய்து அதனால் வரும் அனுபவங்களைக் கொண்டுதான் நம் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள வேண்டும், ஆனால் கூடுமான வரையில் ஒரு முறை செய்த தவறை அடுத்த முறை செய்யாமல் இருக்க முயல வேண்டும். ஏனென்றால் உலகில் இருக்கும் தவறுகள் அத்தனையும் செய்ய நமக்கு ஆயுள் போதாது. அத்தனை தவறுகளை செய்யவும் கூடாது. அதனால் அடுத்தவர்கள் செய்யும் தவறுகளிலிருந்தும் கற்கும் பாடங்களை வைத்து நம்மைப் பண்படுத்திக்கொண்டு வாழ்தலே மிகச்சிறந்த வாழ்வு.
ஒரு தவறைச் செய்துவிட்டு, தவறு செய்துவிட்டோம் என்று எந்தக் கணத்தில் உணருகிறோமோ அந்தக் கணத்திலிருந்து நம் வாழ்க்கை செம்மைப்பட ஆரம்பிக்கிறது, ஆகவே தவறு செய்த பாதையில் 99% விழுக்காடு கடந்து நாம் சென்று விட்டாலும் எப்போது தவறை உணர்கிறோமோ அந்தக் கணமே திரும்பி வந்துவிட்டால் மீண்டும் நாம் மீண்டும் பாதிப்பிலிருந்து தப்பிவிட இறைவன் சந்தர்ப்பம் அளிக்கிறான் என்றுதான் வேதங்கள் சொல்கின்றன.
அதனால்தான் ஒரு திருமங்கை ஆழ்வார் தோன்றினார். இன்னும் பல ஆழ்வார்களும் நாயன்மார்களும் பல தவறுகளைச் செய்து, தவறுகள் செய்துவிட்டோம் என்றுணர்ந்த கணத்திலே ஆழ்வார்களாகவும் நாயன்மார்களாகவும் ஆனவர்களே.
ஆகவே திருந்தி வாழ்தல் என்பது அவமானப்படத் தக்கதல்ல. தவறுகளை உணர்ந்தால் உணர்ந்த மறு கணத்திலிருந்தே மனப்பூர்வமாக அவற்றை ஒப்புக்கொண்டு நற்பாதையில் நம் மனதைப் திருப்பிப் பயணப்பட ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றியான வாழ்க்கை மலரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


