இயக்குனர் ஸ்ரீதர் அமரரானார்
(20/10/2008 9.30 am at Malar Hospital heart attack)இன்று திரை உலகில் இருக்கும் இயக்குனர்களில் ஜாம்பவான்கள் திரு பெரும்பாலோர் திரு இயக்குனர் ஸ்ரீதரால் உருவாக்கப்பட்டவர்களே. இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் ஒரே தளத்தில் எடுக்கப்பட்ட நெஞ்சில் ஓர் ஆலயம் திகிலோடு இணைக்கப்பட்ட நெஞ்சம் மறப்பதில்லை, நகைச்சுவையும் கருத்தாழமும் நடிப்பும் இயக்கமும்,பாடல்களும் வர்ணமும் கலந்த ஒரு அழகான குடும்பப்படம் காதலிக்க நேரமில்லை, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கலர்ப்பட கதாநாயகி காஞ்சனா, வெண்ணிற ஆடையில் ஜெயலலைதா, இன்னும் எத்தனையோ கதாநாயகிகளையும், குண சித்திர நடிகர்களையும் உருவாக்கிய திரு ஸ்ரீதர் அவர்களின் ஆன்மா கலைச்சொர்கத்தை அடையட்டும். நானும் ஒரு நடிகன், ரசிகன் என்னும் முறையில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு ஸ்ரீதரின் மறைவு நம் கலை உலகத்துக்கு பேரிழப்பு, ஈடு செய்ய முடியாத இழப்பு.
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
ஸ்ரீதர் - ஒரு விடிவெள்ளி
எடுத்த எடுப்பிலேயே இயக்குநராகத் திரையரங்கில் ஸ்ரீதர் காலடி பதிக்கவில்லை! உரையாடலாசிரியராகத்தான் "ரத்தபாசம்" மூலம் அந்தச் செங்கல்பட்டுக்காரன் சினிமாவில் பிஞ்சுப் பாதம் வைத்தான்.இலக்கிய வசனகர்த்தாவாகக் "கண்ணகி" வாயிலாக இளங்கோவன் ஜொலித்த நேரம்! அண்ணா ("வேலைக்காரி", "ஓரிரவு"), கலைஞர் கருணாநிதி ("பராசக்தி"), சக்தி க்ருஷ்ணசாமி ("வீரபாண்டிய கட்டபொம்மன்"), இப்படி திராவிட தேசிய எழுத்தாளர்கள் வசன உலகைக் குலுக்கிய காலம்!
பி.யு. சின்னப்பா நடித்து வெற்றிக்கொடி நாட்டிய "உத்தமபுத்திரனை" சிவாஜியை வைத்து ஸ்ரீதர் மறு உறுவாக்கம் செய்து அங்கேயும் வசனகர்த்தாவாகத்தான் வாகை சூடினான்.
திரைக்கலையைக் காட்சி ஊடகமாகத் தெரியப்படுத்த விரும்பிய ஸ்ரீதர், "கல்யாணப்பரிசு" மூலம் கலவரப்படுத்தினார்! பாடலுக்கு முதன்மை கொடுக்கப் பக்கபலமாகப் "பட்டுக்கோட்டை" வாய்த்தார். "கல்யாணப் பரிசு" பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை அவரை "ஸ்ரீதர் படமடா" என்று இயக்குநர் நாற்காலிக்கு ஏற்றி வைத்தது.
"தேனிலவு" என்றதொரு திரைப்படம் மட்டுமின்றி ஒரு தமிழ்ச்சொல்லே அவரால் நமக்குக் கிடைத்தது. "மீண்ட சொர்க்கம்", "அமர தீபம்" போன்றவை காதலையும், அதன் மெல்லிய சோகத்தையும் துல்லியமாக வெளிப்படுத்தின!
"போலீஸ்காரன் மகள்" "பசை"யுடுப்புத் தகப்பனால் பாடையேற்றப்பட்ட மகளின் அவலத்தை வெளிக்கொணர்ந்த வெற்றிப்படம்! "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்" எனும் கண்ணதாசனின் பாடல் இடம்பெற்ற படம்.
பத்துப் பதினைந்து நாட்களில் எடுக்கப்பட்டது என்று பேசப்படும் "நெஞ்சில் ஓர் ஆலயம்" பல ஆண்டுக்காலம் பேசப்பட்ட படமானது. காதலின் தியாகத்தைக் காவியமாக ஸ்ரீதர் தந்துள்ளார். ஒரு சிறு மருத்துவ அறை நடுவே கதையை நகர்ந்த களம் வியப்புக்குரியது.
பூர்வஜென்மக் கதைகளுக்கே ஒரு புதிய இலக்கணம் சொன்னது ஸ்ரீதரின் "நெஞ்சம் மறப்பதில்லை". அதன் பேரில் தொடங்கும் பாடலே போதும் கண்ணதாசனையும் கதையையும் காலகாலங்களுக்கும் நினைப்பதற்கு! கல்யாண குமார், முத்துராமன் இருவரையும் மிகை நடிப்பில்லாத நாயகர்களாக அறிமுகம் செய்தவர் அவர்!
"விடிவெள்ளி", "அமரதீபம்", "நெஞ்சிருக்கும் வரை" படங்களில் நடிகர் திலகத்தையே வெகு நளினமாகக் கையாண்டவர்! அவராலும் கூட நடிக்க வைக்க முடியாத ஒரே நாயகர் எம்.ஜி,ஆர். உதாரணம் "உரிமைக் குரல்".
சமூக மாற்றம், சீர்திருத்தம் என்ற திசைகளில் ஸ்ரீதர் பயணிக்காவிட்டாலும் கூட சரித்திரப்படப் பூச்சூடல்களோ, புராணப் பொய்யுரைகளோ இல்லாமல் சமூகப் படங்கள் அல்லது குடும்பப் படங்களைத் தந்தவர் அவர்! ஸ்ரீதரின் உதவியாளரான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் தான் விசு முதல், வி.சேகர் மற்றும் கஜேந்திரன் போன்றவர்களுக்கே முன்னோடி.
நாட்டுப்புறம் தொடங்கி நகர்ப்புறம் முடிய வாழ்க்கையின் குறிப்பாகக் காதலின் மெல்லிய அதிர்வுகளைக் கூட மேதைமையோடு வழங்கிய ஸ்ரீதருக்குள் நகைச்சுவை உணர்வும் மேலோங்கியிருந்தது என்பதற்கான சான்றுதான் "காதலிக்க நேரமில்லை". அதே திரைப்படத்தில் "எல்லாம் கிடைத்து விட்டது, கதை.. கதை எங்கே கிடைக்கும்?" என்று அல்லாடும் நகைச்சுவைப் பாத்திரம் போல்தான் இன்று கதைப் பஞ்சம்.
"முக்கோணக் காதலின் முன்னவர்" ஸ்ரீதர் எனச் சொன்னாலும் போலிப்பூச்சு மரணமோ, புனைவியற் கற்பனையோ கலவாத தனித்துவமான திரைக்கதை அமைப்பிற்கும் சிறந்த இயக்குநர் தகுதிக்கும் உரியவர் அவர்!
ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் "நட்சத்திர" அந்தஸ்தைப் பறித்து நாட்டுடைமை ஆக்கியவர்! அந்த விடிவெள்ளியின் இடத்தை வேறொரு வெள்ளியால்தான் நிரப்ப முடியும். இன்றைய புள்ளிகளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!
செவ்வண்ணன்


