கைலாயத்தை நோக்கி
அத்தியாயம் இரண்டு
திரு தி.ரா.ச. அவர்கள் என்னுடைய தைரியத்தைப் பாராட்டி இருக்கிறார். உண்மையில் எனக்கு அதற்குத் தகுதி உண்டா? போகப் போகச் சொல்லுங்கள்.செப்டெம்பர் 1-ம் தேதி டெல்லி போய்ச் சேர்ந்து அங்கிருந்து குர்காம்மில் உள்ள மைத்துனன் வீட்டிற்குப் போயாகி விட்டது. அங்கே நாங்கள் ஒரு மாதமாவது தங்கப் போகிறோம் என நினைத்த என் மாமியாரிடம் என் கணவர் நாங்கள் 3-ம் தேதி விமானத்தில் நேபாள் போவதாய்க் கூறியதும் ஏமாற்றம் அடைந்தார். அப்போதும் எங்கள் முழுப் பயணத்திட்டத்தை நாங்கள் என் மைத்துனனிடமும் கூறவில்லை. எல்லாரும் பயப்படுவார்கள் என்பதோடு ஒரு வேளை ஆதரவு தெரிவிக்காமல் discourage செய்தால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். என் பையனுக்கு முழு விவரமும் தெரிந்திருந்தும் எங்களை ஆர்வத்தில் இருந்து தடுக்கக்கூடாது என்று பேசாமல் இருந்து விட்டான். இதனால் என் பெண்ணோ எங்களுடன் சரியாகப் பேசக்கூட முடியாமல் திணறினாள். எங்களுக்கு அப்போது அது ஒன்றும் தெரியவில்லை. போவதற்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் சென்னையிலே எங்களிடமே இருந்தாலும், trekking shoe, wollen socks, rain coat போன்றவை டெல்லி போய் வாங்கிக் கொண்டு, 3-ம் தேதி மாலை 3-00P.M. அளவில் விமான நிலையம் போனோம்.
எங்களுடன் யார், யார் வருகிறார்கள் என்ற விவரம் ஒன்றும் எங்களுக்குத் தெரியாது. என் கணவர் ஒரே ஒரு முறை சென்னை, மயிலாப்பூரில் நடுத்தெருவில் உள்ள அன்னபூர்ணா யாத்திரா சர்வீஸுக்குப் போனதோடு சரி. அப்புறம் அவங்க ஆள் "ஆதி" என்பவர் வந்து விசாவிற்காக வேண்டிய பாஸ்போர்ட் காப்பி வாங்கிப் போனார். எல்லாப் பேச்சு வார்த்தையும் தொலைபேசியில்தான். அதுவும் இந்த சேவையை நடத்தும் "கைலை மனோஹர்" அவர்களைப் பார்த்தது கூடக் கிடையாது. தொலைபேசியில் கிடைத்தாலோ ஒரு நிமிடம் பேசுவதற்குள் அவருக்கு வேறு அழைப்பு வந்து விடும். ஆகக்கூடி எந்த விதமான தகவலும் சரியாக இல்லாமல் தான் நாங்கள் போவதற்கு டி.டி. முதற்கொண்டு எடுத்துக் கொண்டு இங்கே உள்ள மனோஹரின் சேவைக்கு உரிய பணத்தைச் செக்காகக் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். இதை ஏன் இவ்வளவு விவரமாக எழுதுகிறேன் என்றால் வேறு யாரும் இனிமேல் இந்த மாதிரி இருக்கக்கூடாது என்பதற்குத் தான்.
ஏர்போர்ட் போனதும் தொலைபேசியில் மனோஹரை அழைத்தோம். உடனேயே வந்து check-in-counter-க்கு அழைத்துப் போனார். அப்போது தான் சக பிரயாணிகளைப் பார்த்தோம். அநேகமாக என் வயதுக்குள் (ஹி ஹி ஹி 15 தான்) ஒரு 4 அல்லது 5 பேர் இருந்தார்கள். மற்ற எல்லாரும் 60+ தான். ஒரு டாக்டர் அம்மா மடிப்பாக்கத்தில் இருந்து வந்திருந்தார். 78 வயது. அவர் கணவரும் வயதானவர் தான். வேறு ஒரு பெரியவர் பங்களூரில் இருந்து 76 வயது. ஆனால் திடமாக இருந்தார். இப்படியாக நாங்கள் ஒர் 26 பேர் இருந்தோம். இன்னும் 22 பேருக்கும் அல்லது அதிகமாகச் சென்னையில் இருந்து ரெயில் மார்க்கமாகக் "காட்மாண்டு" வருவதாக மனோஹர் தெரிவித்தார். சென்னையில் இருந்து ரெயில் மார்க்கம் என்றால் சென்னை-கோரக்பூர் வந்து அங்கிருந்து பஸ்ஸில் காட்மாண்டு வரவேண்டும். நேபாள் போவதற்கு விசா எல்லாம் கிடையாது. இந்தியர்கள் தடையின்றிப் போகலாம், வரலாம், நேபாளியர்களும் அப்படியே. ஆனால் தற்சமயம் மாறுபட்ட அரசியல் சூழ்நிலையால் பாஸ்போர்ட் நம்பரைக் குறித்துக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சோதனை மிக அதிகம். இங்கே இந்தியாவிலும் அதிகமாக இருந்தது.
சோதனை முடிந்து போர்டிங் பாஸ் கொடுத்து சாமான் எல்லாம் சரிக்கட்டி (ஆமாம், உண்மையிலேயே சரிக்கட்டினோம். ஒருத்தருக்கு 25 கிலோ தான் அனுமதி) குழுவாகப் போனதால் சிறப்பு அனுமதி பெற்று சாமான்களை அனுப்ப முடிந்தது. விமானப் பயண நேரம் 1-20 நிமிடங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் போய் உட்கார்ந்து அவங்க சாப்பாடு கொடுத்து சாப்பிட்டு முடிக்கும்போதே வந்து விடுகிறது. ஒரு வழியாக நேபாளம் வந்து விட்டோம், இரவு 9-30 மணி இந்திய நேரம். நேபாள நேரம் 20 நிமிஷம் கூட. அங்கே ஆரம்பித்தது ஒரு சிறிய தவறு. நாங்கள் எல்லாரும் நேபாளத்திலேயே அதிக நாள் தங்கப் போவதில்லை. மறு நாளுக்கு மறு நாள் அதாவது 5-ம் தேதி "மானசரோவர், கைலாஷ்" யாத்திரை போக வேண்டும். அது இருப்பதோ சீனப்பகுதியான திபெத்தில். அதற்கு நேபாளத்தில் இருந்து அனுமதி வாங்காமல் எப்படிப் போவது? இந்த விவரம் பற்றிய தெளிவு இல்லாமல் நாங்கள் ஒரு 12 பேர் முன்னால் வந்தவர்கள் பாஸ்போர்ட்டைக் காட்டி நம்பர் குறிக்கப்பட்டதும் கீழே வந்து விட்டோம். வந்த பின்னர்தான் திரு மனோஹர் அவர்கள் பாஸ்போர்ட்டில் entry seal வைக்க வேண்டும் எனக்கூற நாங்கள் எல்லாரும் மறுபடி மாடிக்குப் போக அனுமதி கிடைக்கவில்லை. விமானம் ஏறும்போதோ அல்லது விமானத்தில் இறங்கி வரும்போதோ தான் அங்கே போக முடியும். என்ன செய்வது?
பி.கு.: ரொம்பவே விவரமாக எழுதுவதின் காரணம் நாங்கள் செய்த தவறு வேறு யாராலும் செய்யப்படாமல் இருக்க வேண்டித்தான். போரடித்தால் மன்னிக்கவும்.