ஜ்யோதிடம் பொய்யல்ல
அன்பு நண்பர்களே,ஜ்யோதிடம் என்பது பொய்யல்ல, உண்மை. விஞ்ஞானம் வளராத ஒரு காலத்தில் வான சாஸ்த்திரம் என்னும் ஒரு வகைக் கணக்கைக் கொண்டு அன்று பெரியவர்கள் கணித்து வைத்த விஷயங்கள்தான் இன்றும், முழு நிலவு நாள், மறை நிலவு நாள், சந்திர க்ரகணம், சூரிய க்ரகணம் வருடம், மாதம், வாரம், தேதி, மற்றும் எல்லாவித வானசாஸ்திரங்களையும் இன்றும் நாம் கடைப்பிடிக்க உதவியாய் இருக்கிறது. இன்று விக்ஞானிகள் கூறும் ப்ரபஞ்ஜ ரகஸ்யங்கள் அன்றே, நம் முன்னோர்களால், வான சாஸ்திரம் என்று எழுதி வைக்கப் பட்டவையே. ஆகவே பெரியவர்கள் கண்டு பிடித்த ஜ்யோதிடம் பொய்யல்ல, உதாரணமாக அப்போது ஒரு ஜனனம் நிகழும் போது, உடனே அக் குழந்தையின் அழுகுரலை வைத்து, அல்லது அக்குழந்தையின் தலை வெளியே வருவதை வைத்து, உடனே வானிலையை ஆராய்ந்து அக்குழந்தை என்ன நக்ஷத்திரத்தில் என்ன வேளையில் பிறந்திருக்கிறது, அக்குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும், என்பதை துல்லியமாக கணித்து எழுதி வைக்கும் வல்லுனர்கள் இருந்தார்கள், அப்படிப்பட்ட வல்லுனர்களால் கணிக்கப் பட்டது ஜ்யோதிடம், ஆனால் தற்காலத்தில் அது மிகவும் தவறான முறையில், பணம் சம்பாதிக்கப் பயன் படுவதால், யார் வேண்டுமானாலும், ஜ்யோதிடம் சொல்லலாம் என்று மாறிவிட்ட காரணத்தால் சரியான முறையில் சொல்லப்படாத காரணத்தால், நாம் நம்பாத அளவுக்கு ஜ்யோதிடம் மாறிப் போய் உள்ளது. அப்போது குழந்தையின் பிறப்பைத் துல்லியமாகக் கணித்தார்கள், ஆனால் இப்போது குழந்தை பிறக்கும் போது, அக்குழந்தையின் தகப்பனின் கையில் இருக்கும் கடிகாரத்தில் ஒரு நேரம், மருத்துவம் பார்த்த வைத்தியரின் கைக்கடிகாரத்தில் ஒரு நேரம், செவிலித்தாயி்ன் கைக் கடிகாரத்தில் ஒரு நேரம் என்று மாறி இருக்கிற காரணத்தாலும், குழந்தைகள் வெளிநாட்டில், உள்நாட்டில், பிறக்கும்போது (latidude)மாறுவதாலும், சரியாக கணிக்கப் படாமல் போகிறது. அதனால் பலன்கள் துல்லியமாக கணிக்கப்படுவதில்லை. அதை வைத்துக் கொண்டு ஜ்யோதிடம் பொய் என்று சொல்லுவதில் பொருள் இல்லை. ஜ்யோதிடம் உண்மை, இதை நிரூபிக்க நாம் மேலும் ஆராய்வோம். மாற்றுக் கருத்துள்ளவர்கள் தயவு செய்து தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கள், ஆரோக்கியமாக வாதிடலாம், கற்றுக் கொள்வோம்.
எனக்குத் தெரிந்து நான் கேள்விப்பட்ட ஒரு கதையை இங்கு சொல்லுகிறேன்.
ஒரு மஹாராஜா, அவருக்கு இளவரசன் பிறக்கப் போகிறான் என்று அறிந்து, பல நாட்டிலிருந்தும், அந்த நாட்டின் ஜ்யோதிட வல்லுனர்களும் அரசவையில் கூடி இருக்கிறார்கள். அப்போது அந்த நாட்டின் தலைமை ஜ்யோதிடர் இளவரசன் பிறந்தவுடன் ஜாதகம் குறிக்கிறார். குறித்து அதை அவர் படிக்கிறார், இளவரசன் வருங்காலத்தில் எப்படி இருப்பான் என்று சொல்லுகிறார். வருங்காலத்தில் அந்த இளவரசன், நாட்டை சிறப்பாக ஆளுவான், ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைப் படைப்பான் என்றெல்லாம் அவர் கூறுகிறார். அத்தனை ஜ்யோதிடர்களும் அதை ஆமோதிக்கிறார்கள். மன்னன் சந்தோஷமாக அனைவருக்கும் பரிசுகள் அளிக்கிறான், இந்த வேளையில் வறுமையின் வடிவாக எலும்பும் தோலுமாக ஒரு பெரியவர் வருகிறார்.
அவர் அரசனிடம் வந்து, "அத்தனை ஜ்யோதிடர்களும் அவன் அளிக்கும் பரிசுகளுக்காகப் பொய் சொல்லுகிறார்கள், பிறந்திருக்கும் குழந்தை இன்னும் சரியாக ஒரே வருடத்தில் ஒரு பன்றி முட்டி இறந்து போகும்" என்கிறார். அரசன் வெகுண்டெழுந்து அச் ஜோசியனை சிறையில் இடச் சொல்லி உத்தரவு போடுகிறான், அவனை சிறையில் இடுகிறார்கள். உடனே மன்னன் நாட்டிலிருக்கும் அத்தனை பன்றிகளையும் ஒன்றுகூட விடாமல் கொல்லும்படி உத்தரவு போடுகிறான். அனைத்துப் பன்றிகளும் கொல்லப் படுகின்றன. ஒரு வருடம் ஓடுகிறது. அந்த இளவரசனின் பிறந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது, விழா இனிதே முடிகிறது. அரசன் மகிழ்வுடன் இருக்கிறான். குழந்தைக்குத் தங்கத் தொட்டிலிட்டுத் தாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று எப்போதோ மன்னனால் வேட்டையாடப்பட்டு மண்டபத்தில் மேலே மாட்டப்பட்டிருக்கும் ஒரு காட்டுப் பன்றியின் தலை கீழே விழுந்து தங்கத் தொட்டிலில் இருக்கும் இளவரசனைக் கொல்கிறது.
அதிர்கிறான் மன்னன். குழந்தை இறந்த துக்கத்தையும் தாங்கிக் கொண்டு சிறையில் இருக்கும் தீர்கதரிசியை அழைத்து வரச் செய்து அவரை உட்கார வைத்து மண்டியிட்டு, தன்னை மன்னிக்கும் படி வேண்டிக் கொண்டு அவர் எப்படி ஜாதகம் கணித்தார் என்று கேட்க்கிறான். அதற்கு அந்த முதியவர், "முதலில் உன்னுடைய ஆஸ்தான ஜ்யோதிடனைக் கூப்பிட்டு அவர் எப்படிக் கணித்தார் என்று கேள்" என்கிறார்.
ஆஸ்தான ஜ்யோதிடர் வரவழைக்கப் படுகிறார். அவர் நடுங்கிக் கொண்டே, "மன்னா எப்படித் தவறு நேர்ந்தது என்று புறியவில்லை" என்று சொல்லிவிட்டு, ப்ரசவ நேரத்தில் அந்தப்புரத்தில் இருந்த ஒரு தாதியை வரவழைக்கிறார். அவளிடம் எப்படி தான் ஜாதகம் கணித்தேன் என்னும் வழி முறையை விளக்கச் சொல்லுகிறார். அதற்கு அவள், "ஐயா, தாங்கள் கூறிய படி எலுமிச்சைப் பழத்தைக் குழந்தையின் தலை வெளியே கண்டவுடன் வெளியில் எறிந்தேன், அதை வைத்து உள்ளே நான் இருந்த இடத்திலிருந்து வெளியே இருக்கும் தூரத்தைக் கணக்கிட்டு தாங்கள் கணித்தீர்கள்" என்றாள். உடனே சிறையிலிருந்த முதியவர், "சரி, ஆனால் நீ முதல் தரமே சரியாக வெளியில் எலுமிச்சைப் பழத்தை வீசி அடித்தாயா?" என்று வினவ, அதற்கு அந்தத் தாதி, "இல்லை ஐய்யா, ஒரு முறை வெளியில் எறிந்தேன், அது கதவின் மேல் பட்டு உள்ளே விழுந்தது, அதனால் மீண்டும் எறிந்தேன்" என்றாள்.
உடனே முதியவர், "அதுதான் தவறான கணிப்புக்குக் காரணம்" என்றார், ஆகவே ஒரு வினாடி கூட ஒருவனின் தலையெழுத்தை மாற்றவல்லது. இப்போது நினைத்துப் பாருங்கள் ஜ்யோதிடத்தின் மகிமையை. அப்படி இருக்க விவரம் தெரியாமல் வருமானத்துக்காகவே ஜோசியம் சொல்லும் சிலரிடம் ஜாதகத்தைக் காட்டி அவர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்டால் என்னென்ன விபரீதங்கள் வரும் என்று என்ணிப் பாருங்கள்.
அன்புடன்
தமிழ்த்தேனீ


