-
Journeys of Honeybee
-
தேனீயின் பயணங்கள்
பய பக்தி என்றொரு சொற்றொடர் உண்டு அதை பரிபூரணமாக உணர வைத்தது எங்கள் பத்ரிநாத் பயணம். இதைப்பற்றி விரிவாகச் சொல்லப் போகிறேன்.பயம் இல்லாமல் பக்தி வருவதில்லை, அல்லது நாம் எப்போது பயப்படுகிறோமோ அப்போதுதான் நம்மைக் காப்பாற்றும் சக்தியின் நினவு நமக்கு வருகிறது என்றும் கொள்ளலாம். அப்போதுதான் நாம் அந்த சக்தியை வேண்டிக் கொள்ள ஆரம்பிக்கிறோம் என்று தெளிவாக உணர்த்திய பயணம் இந்த பத்ரிநாத் பயணம். பெரியவர்கள் சொல்லிவிட்டுச் சென்ற அத்துனை வார்த்தை உபயோகமும் மிக யோசித்து சொல்லிவைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை உணரும் தருணம் வரும்போதுதான் உணர முடிகிறது நம் சிற்றறிவுக்கு. அது மட்டுமல்ல, ஆபத்துக் காலங்களில்தான் ஜாதி மத, மொழி, இன வித்யாசமில்லாமல் அனைவரும் ஒன்று படுகிறோம். அல்லது அப்போதும் துவேஷம் பாராட்டிக் கொண்டு அழிந்து போகிறோம் என்பது மிகவும் இயல்பான ஒரு செய்தியாக உணர முடிகிறது.
அது போன்று நமக்கு பல அறிவார்ந்த செய்திகளை உணர்த்திய பயணமாக இந்த பத்ரிநாத் பயணம் அமைந்தது என்றால் அது மிகையல்ல.
ஆகவே இந்த பத்ரிநாத் பயணத்தை என் அனுபவங்களை என்னுடைய சகோதர சகோதரிகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். இந்த பகிர்தலில் ஏதேனும் தவறு இருப்பின் பிழை பொறுத்துக் கொள்ளுங்கள், அல்லது என்னை திருத்துங்கள், காத்திருக்கிறேன்.
நானும் என் மனைவியும் வருடா வருடம் பத்ரிநாத் ப்ரயாணத்தை வழி நடத்தும் ஒரு குழுவில் சேர்ந்து பத்ரிநாராயணனை தரிசிக்க வேண்டும் என்று பல நாட்களாக முயன்று கொண்டிருந்தோம். அப்போது "ந்ருஸிம்மப் ப்ரியா' என்னும் பத்திரிகையில் ஒரு விளம்பரம் பல வருடங்களாக வந்து கொண்டிருப்பதை என் மனைவி சுட்டிக் காட்டினாள். நானும் அந்தப் பத்திரிகையை எடுத்துப் படித்துப் பார்த்தேன். திரு பீ.ஆர். தேவநாதன் என்பவர் அந்த யாத்திரையை நடத்துகிறார் என்று அறிந்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவரும், "ஆஹா! தாராளமாக வாருங்கள்" என்றார். அவர் கூறியபடி ஆளுக்கு 4500 ரூபாய் என்று எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து 9000 ரூபாய் காசோலை எடுத்து டெல்லியில் உள்ள தேவநாதனுக்கு அனுப்பினோம். நாங்களும் எங்கள் இருவருக்கும் டெல்லிக்கும் சென்னையிலிருந்து 1ம் தேதி தமிழ்நாடு விரைவு வண்டியில் பயணச் சீட்டு பதிவு செய்து, ஒன்றாம் தேதி இரவு கிளம்பி 3ம் தேதி டெல்லியில் திரு தேவநாதன் குறிப்பிட்ட வெங்கடேஸ்வரா ஆலயத்துக்குச் சென்றோம்.
அங்கு யாத்திரை செல்லப் பலர் தயாராய் வந்திருந்தனர். முதலில் அந்த ஆலயத்தின் உள்ளே குடிகொண்டிருக்கும் திரு வெங்கடாசலபதியையும், திரு மஹாலக்ஷ்மியையும் தரிசித்து, பயணம் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் சிறக்க யாத்ராதானம் என்னும் வேண்டுதலைச் செய்து, அனைவரும் பேருந்த்தில் ஏறி உட்கார்ந்தோம்.
எனக்கு ஒரு வழக்கமுண்டு. எப்போதும் காரிலோ, பேருந்திலோ பயணம் சென்றாலும் ஓட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுவேன். அதே சமயம் நானும் தூங்க மாட்டேன், அவரையும் ஓட்டும் போது தூங்க விடமாட்டேன். அது மட்டுமல்ல, அந்த ஓட்டுனரிடம் சொல்லிவிடுவேன் நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவர். ஆதாலால் நாங்கள் ஐந்து நக்ஷத்திர உணவு விடுதியில் உணவு உண்டாலும், தெருவோரக் கடையில் உண்டாலும் எங்களுடனே உணவு உண்ணுங்கள். நான் அதற்கும் சேர்த்துப் பணம் கொடுத்து விடுகிறேன் என்று. இதில் இரண்டு லாபங்கள் உண்டு. ஒன்று, ஓட்டுனர் நம்மையறியாமல் எங்காவது சென்று சோம பானம், சுரா பானம் போன்றவைகளை அருந்த முடியாது. இன்னொன்று, அவருக்கு இவர்கள் நம்மை மதிக்கிறார்கள் என்கிற எண்ணம் உருவாகும். அதனால் இன்னும் கொஞ்சம் கவனமாக நம்மிடம் பேசிக் கொண்டே ஓட்டுவார். அவர் குடும்பக் கதைகளைச் சொல்லுவார், நமக்கும் உதவிகள் செய்வார், அவருக்கும் ஒரு குடும்பத்துடன் சுற்றுலா சென்றது போன்ற உணர்வு அவரையும் உற்சாகமாக வைக்கும்.
அதே போல் இந்த முறையும் சிறிது நேரம் அவருடன் உட்கார்ந்திருந்து விட்டு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்ற உணர்வு ஏற்படுத்தி விட்டு என்னுடைய இருக்கையில் வந்து உட்கார்ந்தேன்.
நாங்கள் பயணம் செய்த அந்தப் பேருந்தில் 34 பேர் இருந்தனர். அனைவரும் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தனர். அவர்களுடன் 10 நாட்கள் பொழுதைக் கழிக்க வேண்டும். ஆகவே என் இருக்கையிலிருந்து எழுந்து முதலில் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அவர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்தேன் அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுமாறு. அறிமுகப் படலம் முடிந்ததும் அனைவரும் என்னிடம் நாங்கள் உங்களைத் தொலைக் காட்சிகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம் என்று கூறினர். அந்த ப்ராபல்யம் எனக்கு இன்னும் வசதியாக இருந்தது. "நாம் இப்போது பயணம் செல்கிறோம், அனைவரும் ஒன்றாக 10 நாட்கள் இருக்கப் போகிறோம், நம்முடைய பயணம் இனிமையாக இருக்க நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம்" என்று கூறிவிட்டு, நான் எப்போதுமே அதிகப் ப்ரசங்கிதானே, முதலில் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தேன், எல்லோரையும் பார்த்துப் பொதுவாக உறவுக்காரர்கள் யார் என்று ஒரு கேள்வி எழுப்பினேன்.
அனைவரும் அமைதியாக என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பலவேரு பகுதிகளில் இருந்து வந்திருந்த அவர்கள் பலர் பல விதமாக பதில் அளித்தனர்.
கடைசியாக நான் பதில் சொன்னேன், "இந்த வினாடி முதல் நாம்தான் உறவுக் காரர்கள், ஏனென்றால் இங்கிருப்பவர்களுக்கு நல்லது நடந்தாலும் கெடுதல் நடந்தாலும் நமக்குத்தான் முதலில் தெரியும், பிறகுதான் உரிமையுள்ள உறவுக்காரர்களுக்குத் தெரியும். ஆகவே நாம்தான் உறவினர். ஆகவே அனைவரும் எந்த நிலையிலும் என்னை உதவிக்கு அழைக்கலாம்" என்று சொல்லிவிட்டு, நான் அவர்களிடம், "இங்கு கூடியிருக்கும் நாம் அனைவரும்தான் முதலில் உறவுக்காரர்கள், ஏனென்றால் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் முதலில் நம் கூட இருக்கும் அனைவருக்கும்தான் முதலில் தெரியும், பிறகுதான் நம்முடைய சொந்தக்காரர்களுக்குத் தெரியும். ஆகவே இந்தப் பயணம் முடியும் வரையிலாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து பயணத்தை சிறப்பாக, இனிமையாக நடத்துவோம்" என்று வேண்டிக் கொண்டேன். அனைவருக்கும் என் எண்ணம் புறிந்ததால் மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டனர். அங்கே ஒரு சுமுகமான, இதமான, சூழ்நிலை உருவானது, மேலும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்படி நான் அனைவரையும் வேண்டிக் கொண்டேன். அனைவரும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டனர்.
அடுத்து ஒரு பெரியவர் எழுந்தார், "திரு கிருஷ்ணமாச்சாரி சொல்வதில் எனக்கு முழு சம்மதம், ஆகவே அனைவரும் இந்த சுற்றுலாவை மகிழ்ச்சிகரமாக்கக் கைகோர்த்து முயலுவோம்" என்றார்.
தொடரும்..
பகுதி 1
