-
Journeys of Honeybee
-
தேனீயின் பயணங்கள்
பயணங்கள் மனிதனை மனிதன் அறியவும் உலகினை அறீயவும் மிகவும் உதவுகின்றன. இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் மற்றும் உலகிலுள்ள பிற நாடுகளிலும் நிலவும் மக்கள் வாழ்க்கை முறை, அங்குள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கலைகள், காவியங்கள், சுற்றுலாத் தலங்கள், அரசியல் சூழ்நிலை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலவரங்கள், வணிகம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் விவரங்கள் போன்றவற்றை அறீய சுற்றுப் பயணங்கள் உதவுவதைப் போல் வேறெதுவும் உதவுவதில்லை. இப்பகுதியில் ஆசிரியர் தமிழ்த் தேனீ தன் பயணா அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.ஆகிரா
ஒவ்வொரு மானுடரும் செய்ய வேண்டிய முக்கியமான பயணம் ஆன்மீகப் பயணம். ஆன்மீகப் பயணம் என்றவுடன் அதை ஆலய தரிசனமாகக் கற்பனை செய்து கொண்டால் நமக்கு நேரம் ஏது? யாரால் செலவு செய்து எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியும்? என்றெல்லாம் யோசனை எழும், ஆனால் நான் சொல்வது ஆன்மீகப் பயணம். இந்த ஆன்மீகப் பயணம் நம்முடைய முன்னோர்களால் நாம் மதிக்கும் பெரியோர்களால், நம்முடைய தாய் தகப்பனாரால் ஏற்கெனெவே தொடக்கி வைக்கப் பட்டது. அவர்கள் நமக்கு பக்தி என்னும் சாதனத்தை அளித்திருக்கிறார்கள், நாம் செலவில்லாமல் இருந்த இடத்திலிருந்தே ஆன்மீகப் பயணம் செய்யலாம்.
அல்லது நாம் கோயில்களுக்குச் செல்லும் போது அந்தக் கோயில்களைப் பற்றி அறிந்து கொண்டு அவைகளை அனைவரும் அறிய அளிக்கலாம். வருங்கால சந்ததிகளுக்கு இந்த இந்தக் கோயில்கள் இந்த இந்த இடத்திலிருக்கின்றன, அதற்கு இப்படிப் போனால் எளிதாக தரிசனம் செய்யலாம் என்று நம்மால் முடிந்த வரை சொல்லிக் கொடுக்கலாம்.
இதுவும் ஆன்மீகப் பயணத்தில் நாம் கடைபிடிக்கப் போகும் பல வழிகளில் ஒரு வழியே.
ஆகவே ஆன்மீகப் பயணம் தொடங்கலாமா?
பத்ரிநாத் ஆன்மீகப் ப்ரயாணம்:
01/09/2008 திங்கட் கிழமை இரவு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடைந்தோம். வழக்கத்துக்கு விரோதமாக சுமை தூக்குபவர் யாரும் கண்ணில் படவில்லை. ஒரே ஒருவர் மட்டும் இருந்தார். அவரை அழைத்து எங்கள் சுமைகளை எடுத்துக் கொண்டு ரெயில் இருக்கும் ரெயில் மேடைக்கு வரப் பணித்தோம். 50 ருபாய் வேண்டுமென்றார். சரி தருகிறோம் என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தோம். எங்கள் விரைவு ரயில் தொடர் 10 எண் மேடையில் நின்றிருந்தது. அருகிலேயே இருந்தது. அங்கு சென்று இரு பெட்டிகள், ஒரு பை ஆகியவற்றை இறக்கி வைத்துவிட்டு அந்த சுமை தூக்குபவர் 75 ரூபாய் கொடுத்தால்தான் போவேன் என்று அடம் பிடித்தார். அப்போதுதான் கவனித்தோம் அவர் போதை பானம் அருந்தி இருக்கிறார் என்று. 50 ரூபாய்க்கு மேல் கொடுக்க மாட்டேன் என்று உறுதியுடன் நான் சொல்ல அவர் தூய தமிழில் என்னைத் திட்டிவிட்டு, தள்ளாட்டத்துடன் நடையைக் கட்டினார். அவரை ஒரு வழியாக சமாளித்துவிட்டு எங்கள் பெட்டி பைகளை அவற்றின் இடத்தில் வைத்துவிட்டு 10.30 மணிக்கு ஏறி உட்கார்ந்தோம். விரைவுவண்டி புறப்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவர் கையில் பெட்டிகளை இருக்கையில் வைத்துப் பூட்டும் சங்கிலியுடன் வந்தார். அவரிடம் 100 ரூபாய் கொடுத்து அதை வாங்கி எங்கள் பெட்டிகளை இருக்கையுடன் சேர்த்துப் பூட்டிவிட்டு, நேரத்தைக் கழிக்க ஆரம்பித்தோம்.எதிர் இருக்கையில் இருந்த ஒருவர், "சார் நானும் என் நண்பரும் ஒன்றாக வந்தோம், அதனால் நீங்கள் இருவரும் அந்த இருக்கைக்குச் சென்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து உட்காருவோம், முடியுமா?" என்றார்.
நானும் என் மனைவியும் நட்பைப் பிரிக்க வேண்டாமே என்று எண்ணி சரி என்று சொல்லிவிட்டு எதிர் இருக்கைக்கு எங்கள் பெட்டி, பை எல்லாவற்றையும் மாற்றிவிட்டு உட்கார்ந்தோம். நான் என்னுடைய மடிக்கணிணியை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன். நல்ல தூக்கம் கண்ணைச் சுழற்றியது. குளிர்சாதன வசதி இருந்ததால் சுகமான தூக்கம். நிம்மதியாக தூங்கலாம் என்று தூங்க ஆரம்பித்தோம். ரெயில் விரைந்து கொண்டிருந்தது.
"சார், பயணச்சீட்டு" என்று ஒரு குரல் கேட்டது. பயணச்சீட்டு இருப்பு ஆய்வாளர் நின்றிருந்தார். கண்விழித்து பயணச்சீட்டை எடுத்து அவரிடம் காட்டி விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தோம். இரவு நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்தவுடன் என் மனைவி இடார்சி என்னும் ரெயில் நிலையத்தில் எப்போதுமே கொள்ளைக்காரர்கள் அதிகம், அதனால் மிக ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் என்று சொன்னாள். வந்த தூக்கமும் ஒரு வித பயத்திலேயே சென்றுவிட்டது. இடார்சி ரெயில் நிலையம் வந்தது. இயல்பாக சிலர் இறங்கினர். மீண்டும் ரெயில் புறப்பட்டது. தூங்க ஆரம்பித்தோம்.
அவ்வப்போது நல்ல தூக்கத்துக்கிடையே கண்விழித்துக் கண்விழித்து, பெட்டி பைகள் எல்லாம் இருக்கின்றனவா என்று பல முறை பார்த்து, ஒருவழியாக இறைவன் காப்பாற்றட்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து தூங்க ஆரம்பித்தோம்.
பொழுது விடிய ஆரம்பித்தது, 02/09/2008 செவ்வாய் காலை.
டீ, காப்பி, தண்ணி நீளு, வாட்டர், குளிர்பானம் என்று குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்க எழுந்தோம். "சார், காலை சிற்றுண்டி வேண்டுமா?" என்றார் ஒருவர். "ஆமாம் கொடுங்கள்" என்றோம். பல் தேய்த்துவிட்டு வந்து அவர் கொடுத்த சிற்றுண்டியை மிகவும் பொறுமையுடன் உண்டுவிட்டு, அந்த சிற்றுண்டியின் வாசனையை பொறுக்க முடியாமல், வேறு வழியில்லாமல் மீண்டும் பல்தேய்க்க ஆரம்பித்தோம்.
அன்று பகல் பொழுது ரெயில் பணியாளர் ஒருவர் அளித்த மதிய உணவை உண்டோம், மீண்டும் பல் தேய்த்தோம். ஏதோ நம் ரெயில்வே நிறுவனங்களின் உபயத்தால் பற்கள் சுத்தமாகின. அன்று இரவுப் பொழுதை எப்படியும் கழித்தே ஆகவேண்டுமே. என் மனைவி நான் தூங்குகிறேன் என்றாள். சரி என்று சொல்லி அவளுக்கு வசதிகள் செய்து கொடுத்துவிட்டு நானும் கண்ணயர்ந்தேன். ஏதேதோ கனவுகள், அவ்வப்போது வண்டியின் குலுக்கல், ஆங்காங்கே வண்டி நிற்கும் சத்தம், இவைகளுக்கு இடையே தூங்கினோம்.
மறுநாள் காலை 7.30 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தோம். ரெயில் நிலையத்தின் உள்ளே வந்தவுடன் 15 பேர் எங்களை சூழ்ந்து கொண்டனர். ஒரு சர்தார்ஜீ வந்து, "கியா பைய்யா, பூரா லக்கேஜ் கே லேகர் காடி பர் டால்தியா, ஔர் கஹா ஜானேவாலே ஆப், ஹம் லேகர் ஜாதாஹும்" என்றார்.
"எங்கே போக வேண்டும்? நாங்கள் அழைத்துக் கொண்டு போய்விடுகிறோம்" என்று அதுவும் பற்றாக் குறைக்கு அருகிலேயே இருக்கும் இடமாகிய வெங்கடேச்வரா கோயிலுக்கு 450 ரூபாய் என்று சொல்லி, கடைசியில் 350 ரூபாய்க்கு பேரம் பேசி, சரி என்று ஒரு வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். அவர் எங்கெங்கோ சுற்றி எங்களை அழைத்துக் கொண்டு கடைசியாக அந்தக் கோயிலுக்கு அழைத்துப் போனார். அந்தக் கோயிலின் வாசலில் சென்று இறங்கி அவரை அனுப்பிவிட்டு, பெட்டி பைகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்த்துக் கொள்ள என் மனைவியிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்று, பத்ரிநாத் பயணம் ஏற்பாடு செய்திருந்த திரு பீ.ஆர். தேவநாதனை ஒரு வழியாகக் கண்டு பிடித்து உள்ளே சென்றோம். "என்ன சார், இது மாதிரி ஏமாறரீங்க? இந்த இடத்துக்கு 150 ரூபாய்தானே கொடுக்க வேண்டும்" என்றார். சரி எல்லா இடத்திலும் ஜாதி, மொழி, மத பேதமில்லாமல் வாடகை வண்டிக்காரர்கள் சமத்துவமாய் இருப்பதை உணர்ந்தோம், ஏமாற்றுவதில்...
தொடரும்..
பகுதி 2
